கர்நாடக சட்டமன்ற வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு வெற்றி!

கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்பே பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். குமாரசாமி தலைமைக்கு ஆதரவாக 117 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இவர்கள் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், கர்நாடகாவின் முதலமைச்சராக கடந்த புதன்கிழமை அன்று பதவியேற்றார். இவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் இருப்பினும் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார் குமாரசாமி. இவர் பதவியேற்ற பின் இன்று முதல்முறையாக கூடியது கர்நாடக சட்டப்பேரவை.

மஜத மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி சபாநாயகர் பதவி காங்கிரஸை சேர்ந்த ரமேஷ்குமாருக்கு தான் என முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஒப்புக்கொண்ட மஜத கட்சி அதன்படி சபாநாயகர் பதவிக்கு ரமேஷ்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்ய வைத்தனர். பாஜகவும் இந்த பதவிக்கு போட்டியிடுவதாக கூறப்பட்டிருந்தது . அதன்படி பாஜகவை சேர்ந்த சுரேஷ்குமாரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

திடீரென கடைசி நேரத்தில் பாஜக சார்பாக போட்டியிட்ட சுரேஷ்குமார் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆகவே ஒருமனதாக கே.ஆர்.ரமேஷ்குமார் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின் எதிர்க்கட்சி தலைவரான எடியூரப்பா அவையில் சிறிது நேரம் உரையாற்றினார். அவர் பேசிய பிறகு பா ஜ க சட்டமன்ற உறுப்பினர்கள், எடியூரப்பா தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே வெளிநடப்பு செய்தனர். இதற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் குமாரசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!