30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடி முடிவு!

இரண்டு பிரதான வேட்பாளர்களும், தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகள் தொடர்பாக, அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பிரதான ஐந்து தமிழ் கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் கூடி நிலைமைகள் குறித்து ஆராய்வதெனவும், தமிழ் அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான ஐந்து தமிழ் கட்சிகள் நேற்று மாலை கூடி, ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய்வதாக தீர்மானம் எடுத்திருந்தன. எனினும் முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படும் கட்சிகள் நேற்று பிற்பகல் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கே.துரைரட்ணசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உறுப்பினர் ஜனார்தனன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்க தலைவர் சித்தார்த்தன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்தே, 30 ஆம் திகதி ஐந்து கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்து முடிவை அறிவிப்பதென, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!