மாவைக்கு வந்துள்ள சந்தேகம்!

புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம். ஆனாலும் பயனுள்ள தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இனவாதிகள் இடமளிப்பார்களா என சந்தேகிப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்துள்ளதாக அறிய முடிகிறது. எமது கட்சி சார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளனர்.

வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. ஆயினும் காலநிலை சீரின்மையால் நான் யாழ்ப்பாணம் திரும்ப வேண்டியிருந்ததால் கூட்டம் தொடர்பாக அறிய முடியவில்லை.ஆனால் அண்மைய செய்திகளை அவதானிக்கும்போது பெரும்பான்மையான ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு விரைவில் பாராளுமன்றுக்கு கொண்டுவரப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

ஆனாலும் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் அல்லது தமிழ் மக்கள் விரும்பும் வகையிலான தீர்வு ஒன்று வருவதற்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் அல்லது எதிரணியில் உள்ளவர்கள் எந்தளவுக்கு இடமளிப்பார்கள்? என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் அல்லது அச்சம் உள்ளது. ஆகவே பொறுத்திருந்தே சில விடயங்களை பார்க்கவேண்டியுள் ளது எனக் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!