50 முட்டை சாப்பிடும் பந்தயம், 42-வது முட்டையில் பலியான நபர்!

உத்தரபிரதேச மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுபாஷ் யாதவ் ( வயது 42). இவர் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிபிகஞ்ச் மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது ஒருவர் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம் என்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவாதத்தின் இறுதியாக பந்தயம் கட்டியுள்ளனர். அதன்படி 50 முட்டைகளை சாப்பிட்டுக்கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும் எனப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. பந்தய தொகையாக 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு 250 ரூபாய் முன்பணமாக பெறப்பட்டுள்ளது.

இதன்பின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு முட்டை சாப்பிட ஆரம்பித்துள்ளார் சுபாஷ். மது குடித்துக்கொண்டே முட்டைகளை சாப்பிட ஆரம்பித்தவர் 41 முட்டைகளை சாப்பிட்டுள்ளார். 42-வது முட்டையை சாப்பிடும்போது அவர் மயக்கமடைந்து கீழே விழ அருகில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் சுபாஷை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு கூறி உள்ளனர்.

உடனடியாக சுபாஷை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாஷுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்று அவர் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் பந்தயத்தில் சுபாஷ் உயிரை இழந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!