2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தாலும் கூட இம்முறை தேர்தலில் அது நடக்காது. பெரும்பான்மையின மக்களின் வாக்குகளால் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார் என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை மிகவும் பலவீனமான அமைச்சரவையாகும். நாட்டுக்கும் மக்களுக்கும் தேசிய கொள்கைக்கும் அமைவாக எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. ஒரு சில அமைச்சர்கள் தமக்கு தேவையான நபர்கள் குறித்து அவர்களுக்கு சாதகமாக செய்ய வேண்டிய விடயங்கள், நிலங்களை விற்கும் நடவடிக்கைகள் என்பது குறித்து மட்டுமே பேசினர். ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டிருக்காவிட்டிருந்தால் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற பிரதான இரண்டு காரணிகள் உள்ளன. தகுதியற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமித்ததுடன் ஒருசில மோசமான அதிகாரிகளுக்கு பொறுப்புக்களை கொடுத்தனர். அரசியலமைப்பு சபையில் நான் அப்போதும் எதிர்த்தேன். எனினும் பிரதமர் என்னை தடுத்தார். ஜனாதிபதியும் தவறு செய்துள்ளார். ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு அதிகாரத்தை கொடுத்தமை தவறாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்து பல நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டோம். இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளும் ஒரு அணியாகி இலங்கைக்கு எதிராக செயற்பட்டன . இலங்கைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவும் இதுவே காரணம். சோபா உடன்படிக்கையை இலங்கைக்குள் கொண்டுவர அமேரிக்கா முழுமையாக முயற்சி எடுத்தது. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் அனைத்தின் உருவாக்கதாரிகள் அமெரிக்கா மட்டுமேயாகும். அவர்களை கொண்டு அமெரிக்கா இயக்கியமைக்கு அமையவே இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது என்பதே உண்மை.
அதேபோல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி பலவீனமாகிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியினால் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் மிகவும் மோசமானவையாகும். இவர்கள் தொடர்ச்சியாக நாட்டினை குழப்பும் துண்டாடும் நோக்கத்தில் மட்டுமே செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசிய கட்சி இன்றும் ஆட்சியில் உள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காராணம். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலை சாய்க்கும். சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை பெரும் கட்சிக்கு இம்முறை வெற்றி கிடைக்கும் என கூற முடியாது. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாது மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தது உண்மையாகும். ஆனால் இம்முறை பெரும்பான்மை வாக்குகளினால் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். இதில் கிறிஸ்தவ மக்களின் முழுமையான வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!