தமிழரசு கோத்தாவையே ஆதரித்திருக்க வேண்டும்! – நாமல்

இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியமை, ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ். நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஊடகங்களுக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான எமது செயற்பாடுகள் மிகவும் சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், யாழ் மக்களுக்காகவோ வடக்கு- கிழக்கு வாழ் மக்களுக்காகவோ, இதுவரை எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவே இதுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை வடக்கு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பங்காளிக் கட்சியாகும். கடந்த காலங்களில் இருந்த கட்சியல்ல அது.

அந்தக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரிய விடயமல்ல. 2015ம் ஆண்டிலிருந்து கூட்டமைப்பு, அரசாங்கத்துடன்தான் இணைந்து செயற்படுகிறது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க ஆதரவளிப்பதாயின், அவர்கள் உண்மையிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்குத்தான் ஆதரவினை வழங்கியிருக்க வேண்டும்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!