ஒத்த முனைகள் ஒன்றையொன்று உதைக்கும். ஒவ்வாமுனைகள் ஒன்றையொன்று கௌவும். இந்தக் காந்த விதி சமகால அரசியல் மற்றும் சமூக இயங்கியல் ஒழுங்கில் எவ்வாறு வாய்ப்புப் பார்க்கப்படுகின்றது என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது
Student Teachers எனப்படும் ஆசிரியப் பயிலுனர்களின் தலையெழுத்து சிலவேளைகளில் எனது உளவியல் விரிவுரைகளுக்கும் சமூகமளித்தாகவேண்டிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றது. மாறாக, அந்த மாணவர் அணியில் அதி விவேகமான சில ஆளுமைக்கூறுகள் இருந்தமை என்னுடையதுமான தலையெழுத்தாய் இருக்கவும் கூடும்.
தனியாள் வேறுபாடு -Individual differences என்ற ஓர் அலகுக்கான விரிவுரை அன்று திட்டமிடப்பட்டிருந்தது. வகுப்பறை முகாமைத்துவத்தின் தந்திரோபாயங்களைத் தனியாள் வேறுபாட்டிலிருந்து உருவாக்குதல் என்ற உப அலகில் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
அந்த பயிலுனர் தொகுதியிலிருந்த அதிவிவேகம் கொண்ட ஆசிரிய பயிலுனர்களுள் ஒருவர் எழுந்தார். இந்த இடத்தில் சாணக்கியம் என்ற பதப் பிரயோகத்துக்கும் நயவஞ்சகம் என்ற பதப் பிரயோகத்துக்கும் இடையேயுள்ள உளவியல் பிரிகோடு எதுவென்பது என்னை நோக்கிய அவரின் யதார்த்தமான வினாவே.
நான் என்னை சுதாகரித்துக் கொண்டேன். அந்த மாணவரிடம் உங்களுக்கு தரப்பட்ட ஒரு பரீட்சை வினாத்தாளில் அப்பாடத்தில் ஆகக்குறைந்த சித்திக்கான புள்ளிகள் எத்தனை என நான் வினவினேன். நாற்பது புள்ளிகள் என்றனர் மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில்.
இப்போது எக்ஸ் என்ற மாணவன் முப்பத்தேழு புள்ளிகளைப் பெற்றுள்ளான். அவனுக்கு நாற்பதாகக் கூட்டியாக வேண்டுமென்பது பரீட்சகரின் மனோநிலை. ஆனால், அதனை அவர் நியாயப்படுத்தியாக வேண்டிய தேவையிருந்தது. ஏனெனில் புள்ளியிடப்பட்ட விடைப்பத்திரம் மாணவர்களின் பார்வைக்காக பரீட்சை முடிவடைந்த பின்னர் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பது பீடாதிபதியின் மீறமுடியாத உத்தரவு. ஆகவே, Justification நிறைந்த ஒரு சாணக்கியமான மீள்பார்வை மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியருக்கு அவசியம் ஏற்படும். இல்லாதுபோயின் மாணவர்களிடையே அவருக்கு சங்கடமும் அவமானமும் நிகழும்.
குறித்த அந்த மீள்பார்வையின்போது மாணவருக்குச் சார்பான நோக்கில் சில வினாக்களுக்கு தலா ஒரு புள்ளி வீதம் மூன்று புள்ளிகள் கூட்டப்பட்டால் அம்மாணவன் சித்தியடைவான்.
ஆனால், வை என்ற ஒரு மாணவன் இருபத்தைந்து புள்ளிகளையே பெற்றிருந்தான். அவனுக்கு நாற்பது புள்ளிகளை வழங்குவதன் மூலம் சித்தியடையச் செய்வித்து National Diploma in Teaching கொடுக்கும் விரிவுரையாளரை சாணக்கியமானவர் எனலாமா அல்லது நயவஞ்சகர் எனலாமா என்றேன். பலர் நயவஞ்சகர் என்றனர்.
ஆனால், வினாத்தொடுத்த மாணவரை பெயர் சொல்லி அழைத்து நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்றேன். முன்னையவரை சாணக்கியர் என்று நிறுவ இந்த உதாரணம் பொருந்தி வருகின்றதா என்று மீண்டும் என்னை நோக்கி அவர் வினாத் தொடுத்தார். ஒத்த முனைகள் ஒன்றையொன்று உதைப்பதைக் கண்டுகொண்ட நான் மேலும் சுதாகரித்துக்கொண்டு, இரண்டாமவர் நயவஞ்சக மானவர் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றதல்லவா எனக் கேட்டேன். அந்தப் பயிலுனர் ஆம் என்றுவிட்டு பின்னர் மீண்டும் தன் திருப்தியீனத்தை வெளிக்காட்ட, ஆனால்.. என்று இழுத்தார்.
அந்த ஆனால் என்ற இழுவையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன. சாணக்கியம் இதைவிட ஆழமானது என்பதும் அது நயவஞ்சகம் என்ற பதத்துக்கான உளவியல்சார் எதிர்ச்சொல் அல்ல என்பதுமே அந்த ஆசிரியப் பயிலுனரின் கருத்தாக இருந்திருக்கும். அத்துடன் அதனை மனசாட்சியுடன் பேசுபவர்களால் மட்டுமே நிறுவமுடியும் எனவும் அவர் கூறியதாக நான் புரிந்து கொண்டேன்.
அப்போது விரிவுரை நேரம் முடிந்ததால் எனது Quality in Educational Leadership க்கு மேலதிக சேதாரம் எதுவும் அப்போதைக்கு ஏற்படவில்லை. மறுதினம் அவரை நான் முழு ஆயத்தத்துடன் சென்று திருப்திப்படுத்தினேன்.
மேற்படி வகுப்பறையில் நடந்து முடிந்த சம்பவமான அந்த உதாரணத்தின் மூலம் நாம் கவனிக்க வேண்டியது இந்த இரண்டு சொல்லாடல்களிலும் உள்ள பிரிகோடானது மிகவும் மைக்ரோ நிலையில் உள்ளது என்பதையும், அதனை பிறர் புரிந்துகொள்ளச் செய்வது என்பது மிகச் சிக்கலானது என்பதையுமே. அத்துடன் ஒவ்வா முனைகளான அந்தப் பிரிகோட்டின் இருவேறு அந்தங்களும் ஒன்றையொன்று கௌவி, ஒன்றின் பார்வையை மற்றது மறைத்துவிடக் கூடியது என்பதுமாகும்.
மேலும் இதனை ஒரு மெல்லிய பிரிகோடு பிரிக்கின்றதே தவிர சந்தர்ப்பத்தைப் பொறுத்து சாணக்கியன் நயவஞ்சகனாகவும் பர்க்கப்படலாம் என்பதும் இங்கு பிரதானமாக வலியுறுத்தத்தக்கதாகும். அதனால் மனச்சாட்சியுடன் கூடிய ஒரு சாணக்கியன் சந்தர்ப்ப நிர்ப்பந்தத்தால் நயவஞ்சகனாகப் பார்க்கப்படும் சமூக உளவியலில் இங்கு ஏராளமாக நிறைந்து காணப்படுகின்றது என்பதும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையே.
இன்றைய சமூக அரசியலில் இவ்விரு பதப் பிரயோகங்களுக்குமான வெளிப்படையான அர்த்தத்தை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டுமாயின் கடந்த 2015ஆம் ஆண்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு முறை நாம் பின்னோக்கி நகர்தல் வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வெற்றியடைந்தவரால் தரப்பட்ட வாக்குறுதிகளையும் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் அதே நபரால் நடத்தி முடிக்கப்பட்ட சம்பவங்களையும் எண்ணிப் பார்க்கையில் நாம் அதனை உணர்ந்துகொள்ள முடியும்.
முதலும் கடைசியுமாக இம்முறை மட்டுமே ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கின்றேன் என்றவர் இரு ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் அத்தேர்தலில் தான் போட்டியிடவேண்டும் என்பதற்காக அவர் செய்த அத்தனை தெப்பிராட்டியங்களையும் நாம் எண்ணிப்பார்க்கையில் நயவஞ்சகத்தின் வெளிப்படையான இலக்கணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
நயவஞ்சகனின் மற்றுமோர் இலக்கணம் அவர் செய் நன்றி கொன்ற மகர் என மக்களுக்கு தெரிபடுவார் என்பதாகும். இக்கூற்றானது வள்ளுவர் கூறியது. இதனைவிட ஒரு நயவஞ்சகனின் சாமுத்திரிகா லட்சணத்தை வேறெந்த அறிஞனும் கூறிவிட முடியாது. அந்தக் கூற்றுக்கு அப்பழுக்கில்லாத இலக்கண சுத்தமான புருஷராக நாம் இன்றைக்கு ஜனாதிபதி என்ற அப்பதவியில் இருப்பவரை காணமுடியும். ஒரு காலத்தில் பாமரப் பொதுமக்களால் பெரும்பாலும் அறியப்படாமலிருந்த ஒருவரை முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தன்னால் முடிந்த அத்தனையையும் செய்து 2015ஆம் ஆண்டுக்கான பொது வேட்பாளராக்கினார்.
எல்லாம் வல்ல ஜனாதிபதியாக இருந்த மதிநுட்பமும் அரசியல் திடகாத்திரமும் வாய்ந்த ஒருவரை அவரின் பலவீனங்களின் பின்னாலே சென்று அவரை மண் கவ்வச் செய்து விலாசமே இல்லாதிருந்தவரை ஜனாதிபதியாக்கினார் அந்த முன்னாள் ஜனாதிபதியான பெண். ஆனால், இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்தப் புதிய ஜனாதிபதியை தங்களின் ராஜாங்கத்தை மீட்கும் கபட நோக்குடன் அண்டிக் கெடுக்க முன்னாள் உயர் கல்வி அமைச்சை அலங்கரித்தவர் முயற்சியை மேற்கொண்டார். அத்தகையவர்களின் கபடமான புத்திசாலித்தனத்தை ஊகித்தறிய முடியாத ஒரு பேதையாக புதிய ஜனாதிபதி அப்போது நடந்துகொண்டார். இதுதான் அடுத்த முறையிலும் ஜனாதிபதிக் கதிரையில் அமர வேண்டும் என்ற பேராசை விளைவித்த புத்திசாலித்தனமே.
தன்னை ஜனாதிபதி கதிரையில் அமரவைத்து அழகுபார்த்த அந்த அம்மையாரையே சந்திக்க முடியாது என நிராகரிக்கும் அளவுக்கு அவரின் சிரசில் ஓர் ஒளிவட்டமாக நயவஞ்சகத் தன்மை வெளிப்படையாகவே பிரகாசிக்கிறது.
மீண்டும் அந்த சிங்காசனத்தின் மீது அமரும் ஒரு பேராசை அவரின் அன்றைய எதிரிகளாயும் இடைக்காலத்தில் நண்பர்களாயும் வந்து போனவர்களால் ஏற்படுத்தப்பட்டது. இந்த பாழாய்ப்போன ஒரு வாத்ஸல்யத்தை உள்வாங்கி தன்னுடைய பேதமை நிறைந்த தலைக்கிறுக்கினால் தான் யாராக இருந்தேன் என்பதையும் மறந்த பரவச நிலையில் அவர் ஆனந்தக் கூத்தாடினார்.
ஒரு நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தை தம் கைவசம் வைத்துள்ள ஓர் அரசியல் தலைமையானது எப்படியெல்லாம் புத்திக்கூர்மையற்றவராக (சாணக்கியம் அற்றவராக) இருக்கக்கூடாது என்பதற்கும் எப்படிப்பட்ட நயவஞ்சகத்தன்மை கொண்டவராக இருக்கமுடியாது என்பதற்கும் தவிர்க்க முடியாத எடுத்துக்காட்டாக அவர் பிரகாசித்தார். நாளைய வரலாறு இதனை ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது.
இந்தப் பாத்திரத்தை ஏற்றிருப்பவரை சமகாலத்தில் நயவஞ்சகத் தன்மைக்கான வெளிப்படையான உதாரணமாக ஆசிரியர்களும் ஒழுக்க போதகர்களும் தத்தம் மாணவர்களுக்கு எடுத்து விளக்க முடியும்.
மேற்கூறப்பட்ட இரண்டு பதப் பிரயோகங்களையும் நாம் மேலும் தெளிவாக விளங்கிக்கொள்ளவும் இளைய தலைமுறையினருக்கு போதனை செய்யவும் இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ அரசியலில் பல வரலாற்று உதாரணங்கள் உள்ளன.
முஸ்லிம் அரசியல் தோற்றம்பெற்ற பின்னர் வந்த தேர்தல்களுள் 1989 பாராளுமன்றத் தேர்தல் முக்கியமான ஒன்று. ஐ.தே.க.விலிருந்து தத்தம் பதவி ஆசைகள் நிராசையாக ஆக்கப்பட்டமையால் மு.கா.வின்பால் ஓடோடி வந்த பலரையும் ஒற்றுமையின் கயிற்றை பற்றிப் பிடிப்பான்வேண்டி சேர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் தலைவர் அஷ்ரப் இருந்தார். அப்படி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் ஒருவர் ஓடோடி வந்தார். அவர் ஓடோடி வந்த அரசியல் முழிவியளத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் கைகூடி வந்தது. ஆகவே, காத்தான்குடி உள்ளூராட்சி சபைக்கு மு.கா. தராசு சின்னத்தில் வேட்பாளர்களை முன்மொழிந்திருந்தது. ஆனால், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினால் அந்தத் தேர்தலானது பின்போடப்பட்டது. அதன் பிறகான வடக்கு-–கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும் அந்த மன்சாட்சி இல்லாத சாணக்கியன் போட்டியிடுவதற்கான ஒழுங்குகளும் ஏற்பாடாகியிருந்து.
இதனிடையே 1989 பாராளுமன்றத் தேர்தலும் வந்து சேர்ந்தது. முதன்முதலாக தொகுதி முறை நீக்கப்பட்ட தேர்தல் அது. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியும் கல்குடா தொகுதியும் சேர்ந்து மட்டக்களப்பு தேர்தல் மாவட்டமாக நியமனப்பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரால் கோரப்பட்டிருந்தன.
ஏற்கனவே பிரதேசவாதத்தில் மூழ்கிப்போன ஓர் இனமாக அடையாளப்படுத்தப்படிருந்த முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும் பாரிய பொறுப்பு தலைவர் அஷ்ரப்பின் தோள்களில் வந்து சேர்கின்றது. இம்மக்களை ஒன்றுசேர்க்க பாராளுமன்ற உறுப்புரிமையை இவ்விரண்டு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தல் என்ற முடிவை மு.கா.வின் அன்றைய மத்தியகுழு (அப்போது அரசியல் அதியுயர் பீடமோ அல்லது உச்சபீடமோ இருக்கவில்லை) தீர்மானமாக நிறைவேற்றியிருந்தது. சாணக்கியமும் மனசாட்சியுமுள்ள இத்தீர்மானத்துக்கு அன்றைய மூன்று பிரதான வேட்பாளர்களுமே சாணக்கியமாக இணங்கியிருந்தனர்.
தேர்தல் முடிந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மு.கா.வின் ஆசனமும் உறுதிப் படுத்தப்பட்டாயிற்று. அதன்படி முதலிரண்டு ஆண்டுகளுக்கும் காத்தான்குடியை பிரதிநிதித்துவப்படுத்திய ஹிஸ்புல்லாஹ் என்பவர் பாராளுமன்ற உறுப்பினராக மு.கா.வின் செயலாளரினால் பரிந்துரை செய்யப்பட்டார். செய்யப்பட்ட இணக்கப்பாடுகளுக்கேற்ப இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததும் ஹிஸ்புல்லாஹ் இரண்டாமவரான முகைதீன் அப்துல் காதர் என்பவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி போய்ச்சேர்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு தலைவரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால், அங்கே ஒவ்வாமுனைகளான சாணக்கியத்தை நயவஞ்சகம் கௌவி வெற்றிகொண்டது. இந்த விடயம் நீதிமன்றம்வரை சென்று, சட்டத்தில் காணப்பட்ட ஓட்டைகள் மு.கா. தலைமைக்கு தலைகுனிவை ஏற்படுத்திற்று. இது முஸ்லிம் இனத்துவ அரசியல் வரலாற்றில் சாணக்கியத்துக்கு நயவஞ்சகத்தினால் ஏற்படுத்தப்பட்ட முதலாவது மாபெரும் தலைகுனிவு.
மேலுமொரு முக்கிய சம்பவத்தையும் இங்கு சிலாகித்துக் கூறமுடியும். இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையினர் சம்மாந்துறை நகரை 17.05.1989 அன்று தீயினால் துவம்சம் செய்தனர். இது இலங்கை எங்கணும் பாரிய அதிர்வலையை உருவாக்கிற்று.
இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் மருதானை முஹியித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் உலகின் கவனயீர்ப்பு மையமாகத் தொழிற்பட்டது. அதன் உடனடி விளைவாக இந்திய அமைதிகாக்கும் படையினர் நாட்டை விட்டு வெளியேற்றப்படல் வேண்டும் என்பது இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலாக அன்று முதல் ஒலிக்கத் தொடங்கிற்று.
அப்போது வன்முறையை மட்டுமே அரசியல் வழிமுறையாகக் கொண்டிருந்த ஜே.வி.பி.யினர் ஏற்கனவே 27 ஜூலை 1987இல் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டனர். ஜே.வி.பி. ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உயிருடன் இருந்துகொண்டு வன்முறை அரசியலை வழிநடத்திக் கொண்டிருந்தார். அது இந்தியப் படையினருக்கு எதிரான சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியாகப் பார்க்கப்பட்டது. எனவே, தெற்கில் ஜே.வி.பி.யினரை ஒரு வழிக்குக்கொண்டு வந்தாக வேண்டிய நிர்ப்பந்தமான ஒரு தேவையும் அரசுக்கு ஏற்பட்டது.
அதனால் ஜனாதிபதி பிரேமதாசவின் சாணக்கிய மூளை பின்வருமாறு இயங்கியது. அவர் 29.05.1989 அன்று கொழும்பில் நடைபெற்ற பௌத்த விகாரை ஒன்றின் முக்கிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, இந்த ஆண்டு (1989) இறுதிக்குள் இந்திய அமைதிகாக்கும் படையினர் நாட்டை விட்டு முற்றாக வெளியேறிவிட வேண்டும் என்று கட்டளை போன்ற ஒரு வேண்டுகோளை விடுத்தார். மட்டுமன்றி அதன் ஒரு சாதகமான அடையாளத்துக்காக அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்தே இந்த நடைமுறையை ஆரம்பித்தாக வேண்டும் என்றும் திடமாக அறிவுறுத்தினார்.
இப்போது இந்தப் பந்தை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரின் ஆடுகளத்துள் வீசினர் அவரின் அரசியல் எதிரிகள்.
அவர் சொன்ன பதிலை இங்கு குறிப்பிடுவதற்கு முன்னர் அன்றைய இனத்துவ அரசியல், அன்றிருந்த சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், விசேடமாக வடக்கு–கிழக்கு முஸ்லிம்களை சூழவிருந்த நெருப்பு வளையம், பிராந்திய விஸ்தரிப்புவாதம் எனும் இந்தியாவின் பூகோள அரசியல் என்பன பற்றிய ஒரு பார்வை அவசியமானது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் அவரைத் தொடர்ந்த அவரின் புதல்வர் ராஜீவ் காந்தியும் இந்தியாவை பூகோள அரசியலில் உலகில் கணிசமான அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்திருந்த காலமது. நேருவின் சாணக்கியம்சார் அரசியலின் தங்குதடையற்ற வாரிசுகளாக அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக பிரகாசித்தனர்.
ராஜீவ் காந்தி அந்த சாணக்கியப் பதக்கத்தின் இறுதி வைர மணியாக இலங்கிய காலம். ஆனால், அவரின் அரசியல் கொலையுடன் இந்தியாவின் பூகோள அரசியல் வகிபாகம் சிதைவடையத் தொடங்கிற்று.
இதனை மிகநுட்பமாக அவதானித்த ஜனாதிபதி பிரேமதாச ஜே.வி.பி.யின் பயங்கரவாத நெருக்கடியில் இருந்து முழு நாட்டையும் புலிகளின் பயங்கரவாத நெருக்கடியிலிருந்து தன்னையும் ராஜதந்திரமாக விடுவித்துக்கொள்ள இச்சந்தர்ப்பத்தை வெகு சாமர்த்தியமாகவும் சாணக்கியமாகவும் பயன்படுத்தினார்.
சர்வதேச விவகாரங்களில் உலகின் தலைசிறந்த ராஜதந்திரியாகப் பார்க்கப்பட்ட தீக் ஷித் என்ற இந்திய பூகோள அரசியலின் விமானியே திக்குமுக்காடிப்போகின்ற ஒரு தீர்மானத்தை ஆர். பிரேமதாச அப்போது எடுத்திருந்தார். அதுதான் இந்திய அமைதிப்படையினர் உடனடியாக வெளியேறியாக வேண்டும் என்ற அவரின் பிரகடனமான அக்னி வளையமாகும்.
இந்தியப்படை வெளியேறுவது சரிதான். அதன் பின்னர் வடக்கு–கிழக்கின் பாதுகாப்பு எனும் ஆயுதம் யாரின் கரங்களில் இருக்கப்போகின்றது என்பதைப்பற்றி அப்போது இருவர் மட்டுமே திடமாக சிந்தித்தனர். ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.
வரதராஜப் பெருமாளின் சாணக்கியமற்ற ஒருதலைப்பட்சமான தனி ஈழப் பிரகடனம் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு மட்டுமல்லாது தனக்கும் கூட இவ்வளவு விரைவாக சாதகமகப் போகின்றது என்பதை பிரபாகரனும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
ஆனால், இதனை சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் பயன்படுத்தி வடக்கு– கிழக்கின் ஆயுதச் சமநிலையின் வெற்றிடத்தை தான் நிரப்பிக்கொள்ளும் சாணக்கியமான வியூகம் ஒன்றை பிரபாகரன் வகுத்துக்கொண்டார். முஸ்லிம் பொதுமக்கள்கூட தங்கள் தலைமைத்துவத்தின் அபிப்பிராயங்களையும் மீறி புலிகளின் ஆயுதங்களுடனான பிரவேசத்துக்கு பச்சைக்கொடி காட்டினர்.
முஸ்லிம்களை காஷ்மீரிய எதிரிகளாகவே கருதி கிழக்கில் நுழைந்த இந்தியப்படையினர் சிறிது சிறிதாக முஸ்லிம்களின் அப்பாவித்தன்மையை புரிந்து கொண்டிருந்த காலமது. இப்படியான இரண்டும் கெட்டான் காலத்தில் இந்தியப்படை வெளியேறுவதா வேண்டாமா என்ற கருத்தை முஸ்லிம்களின் கருத்தாக எடுத்துரைக்கவேண்டிய பாரிய சுமை அஷ்ரப்பின் தோள்களுக்கு வந்துசேர்ந்தது. ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம். இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்ற தொடர் வடக்கு– கிழக்கின் முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஏதிர்பார்க்கப்பட்ட அஷ்ரப்புக்கும் அப்போது அழகாகப் பொருந்தி வந்தது.
அதாவது, இந்தியப்படை வெளியேறினால் அசாதாரணமாக வடக்கு–கிழக்கில் உருவாகப் போகின்ற பாதுகாப்பு வெற்றிடம் – -Security Vacuum எவ்வாறு நிரப்பப்படவேண்டும் என்று அப்போது சிந்தித்தவர் முஸ்லிம்களிடையே வேறு யாருமல்ல, மு.கா.வின் ஸ்தாபகத் தலைவரான அஷ்ரப் மாத்திரமே.
இந்தியப்படை வெளியேறினால் அந்தப் பாதுகாப்பு வெற்றிடத்தை இலங்கை ஆயுதப்படை நிரப்புமா அல்லது முஸ்லிம்கள் கண்டு அஞ்சிப் பயந்த விடுதலைப் புலிகள் நிரப்புவார்களா என்ற நியாயமான தன்னுடைய வாதத்தை அஷ்ரப் நாட்டை ஆண்ட நிறைவேற்று அதிகாரத்தின் மனசாட்சியின் முன்னே சாணக்கியமான வினாவாகத் தொடுத்தார்.
இலங்கை முஸ்லிம்களின் புத்திஜீவிகள், பல்கலைக்கழக கல்விமான்கள், அரசியல் வாதிகள், அரட்டை மன்னர்கள் உட்பட அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றாக சிந்திக்க அஷ்ரப் மாத்திரம் மாறி யோசித்த தன்னந்தனி மனிதனாகத் தெரிந்தார். இந்தியப்படை விட்டுச் செல்லவுள்ள பாதுகாப்பு வெற்றிடத்தை யார் நிரப்பப்போகின்றார்கள் என்பது சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்படும் வரை இந்தியப்படை வடக்கு–கிழக்கிலிருந்து வெளியேறக்கூடாது என்று தன்னந்தனியனாக நின்று அஷ்ரப் தைரியமாகக் குரல்கொடுத்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தலைமையின் சாணக்கியம் மட்டுமல்லாது முஸ்லிம்களிடையே அரசியல் அதிகாரத்துக்காக புரையோடிப் போயிருந்த நயவஞ்சகமும் தெட்டத்தெளிவாக அம்பலத்துக்கு வந்தது.
பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்காக பேரினவாதிகளின் பால் சென்றவர்கள் சாணக்கியமும் தியாகத் தழும்புகளும் நிறைந்த அஷ்ரப்பை இந்தியப்படையின் கைக்கூலியாகப் பரிகசித்தனர்.
மட்டுமன்றி இந்திய அமைதிப் படையினரின் சமூக அடக்குமுறைக்குள்ளும் அவர்களின் கூலிப்படையினரின் பயங்கரமான நெருக்குவாரங்களுக்குள்ளும் சிக்கி, மீதியாகவிருந்த முஸ்லிம் இளைஞர்களை ஆக்ரோஷப்படுத்தி அஷ்ரப்பின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் அவர்கள் முனைந்தமைக்கு பல சான்றுகள் உள்ளன.
சாணக்கியத்தோடும் சமூகத்தின் பாதுகாப்பு என்ற லட்சியத்தோடும் அஷ்ரப்பினால் தொடுக்கப்பட்ட அந்த வினா வெறும் வினாக்குறியோடு நின்றது. இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் எதிரியாகவிருந்த சில நாடுகளின் ராஜதந்திரிகள்கூட அஷ்ரப்பின் இந்த வினாவை பலவீனமாக்குவதில் முன்னின்று உழைத்தனர். முஸ்லிம் அப்பாவிப் பொதுமக்கள்கூட இந்திய அமைதிப்படை முஸ்லிம்களிடத்தே உண்டாக்கிய பேரழிவுகளை மாத்திரம் கருத்திற்கொண்டு புலிகளின் வரவை ஆதரிப்பதிலேயே முனைப்புக் காட்டினர்.
மு.கா.வின் கிழக்கு மாகாணத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 25 மோட்டார் சைக்கிள்களை தனது தலைமைக்குத் தெரியாமலேயே நயவஞ்சகமாக புலிகளுக்குப் பரிசளித்து, அவர்களுக்கான தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தி தனக்கான உயிர்ப்பிச்சையை பக்குவமாக பெற்றுக்கொண்டார். இது அந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் சாணக்கியமான நயவஞ்சகமாக இருந்ததால் பொதுமக்களின் செவிகளை சென்று சேரவேயில்லை.
1989 நவம்பரில் வரதராஜப்பெருமாள் தன்னுடைய ராஜதந்திரமற்ற, சுயாதீனமான தமிழீழ (Unilateral Declaration of Tamil Eelam) பிரகடனம் செய்தமை புலிகளின் சாணக்கியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த சந்தர்ப்பத்தில் புலிகள் மறைமுகமாக ஆர்வம்கொண்டிருந்த தமிழீழ அடைவுக்கான சந்தர்ப்ப காய்நகர்த்தலை Lanka Guardian இன் பிரதம ஆசிரியரும் இலங்கையின் தேசிய புத்திஜீவியுமாக அறியப்பட்டிருந்தவருமான மேவின் டி சில்வா கூட புலிகளின் சமாதானத்துக்கான ஈடுபாடாகவே பார்த்தார்.
1989 நவம்பரில் வரதராஜப்பெருமாள் வெறும் ஏட்டளவில் செய்த பிரகடனத்தை 1990 ஜூனில் புலிகள் யுத்த பிரகடனமாகச் செய்தனர். புலிகள் பிரேமதாசவுடன் நடந்துகொண்ட சமாதானத்துக்கான பின்வாங்கல் புலிப்பாய்ச்சலுக்கான பதுங்குநிலை என்பதை புரிந்துகொள்ள பிரேமதாசவும் ஆறு மாதங்களை கடக்கவேண்டியிருந்தது.
இலங்கை அரசியலில் மாத்திரமல்ல. உலக அரசியலிலும் சாணக்கியத்துக்கும் நயவஞ்சக முனாபிக் தனத்துக்குமான பிரிகோடு மிகவும் நுண்பாகமான நிலையிலேயே உள்ளது. ஒவ்வாமுனைகளான இவ்விரண்டு முனைகளும் ஒன்றையொன்று கௌவிக் கொள்ளுதலே நடைமுறை அரசியலின் காந்த விதியாகும்.
நுட்பமாக மக்களை ஏமாற்றத் தெரிந்த நயவஞ்சகன் சாணக்கியனாக பார்க்கப்படுவதும் மனசாட்சியுடன் அதேவேளை சாணக்கியமாக சமூகப் போராட்டங்களை முதன்மைப்படுத்துபவன் நயவஞ்சகனாக சமூக எதிரிகளால் காட்சிப்படுத்தப்படுவதும் இன்றைய உலகின் யதார்த்தங்களே.
– கங்கத்தியப்பா –
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!