மதிய உணவில் செத்து கிடந்த 4 எலிகள்: சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி- மயக்கம்

மத்தியபிரதேச மாநிலத்தில் எலிகள் இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மதிய உணவில் செத்து கிடந்த 4 எலிகள்: சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி- மயக்கம்
போபால்:

மத்தியபிரதேச மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்காக சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு நாளும் மதியம் ஊட்டச்சத்து உணவு தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சாகர் மாவட்டத்தில் உள்ள செம்ராபக் என்ற கிராமத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது அந்த உணவுக்குள் 4 எலிகள் செத்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்குள் சில குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டு விட்டது. அவர்கள் அதை சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பாட்டுக்குள் எலி செத்து கிடந்தது தெரிந்ததும் அந்த குழந்தைகளுக்கு வாந்தி – மயக்கம் ஏற்பட்டது.

அவர்களில் 5 பேர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மற்ற குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துணை கலெக்டர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். சமையல் ஊழியர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மேலும் இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!