‘சன் சீ’ கப்பல் உடைக்கப்பட்டது!

492 அகதிகள் தமிழ் அகதிகளுடன் கனடாவை அடைந்து, உலகத்தின் கவனத்தை ஈர்த்த சன் சீ கப்பல் தற்பொது உடைக்கப்பட்டுள்ளதாக Canadian Maritime Engineerin (CME) அறிவித்துள்ளது.

2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி MV Sun Sea என்ற கப்பல் கனடாவின் வன்கூவர் மானிலத்தின் பிரிட்டிஸ் கொலம்பிய கடற்பிராந்தியத்தில் வந்து நின்ற காட்சி உலகத்தின் ஊடகங்கள் அனைத்தையும் அதிர வைத்திருந்தது.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இருந்து உயிர் தப்பிய 492 அகதிகள் அந்தக் கப்பலில் இருந்தார்கள். 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர் மற்றும் குழந்தைகள் அந்தக் கப்பவில் மூன்று மாதங்கள் கடலில் பயணம் செய்து கனடாவை வந்தடைந்திருந்தார்கள்.

இவர்கள் தாய்லாந்தில் கப்பலேறி மிகவும் கடுமையான, ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட செய்தி உலகை உலுக்கியிருந்தது. அந்த அகதிகளை கனடா அரசாங்கம் கையாண்ட விதமும் பாரிய வாதிப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருந்தது.

அந்த கப்பலில் பயணம் செய்த பெரும்பாலானவர்கள் இரண்டு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டு, 2012ம் ஆண்டு மே மாதமளவில் விடுவிக்கப்பட்டார்கள். பயணிகளில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், 19 பயணிகள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.

அவ்வாறு நாடுகடத்தப்பட்வர்களில் சத்தியபாவான் ஆசீர்வாதம் என்பவர் படைகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பியிருந்த மிகவும் பிரபல்யமான சன்சீ கப்பல் தற்பொது உடைக்கப்பட்டுள்ளதாக Canadian Maritime Engineerin (CME) அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!