ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை பத்திரமாக மீட்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹி மாவட்டத்தில் 5 வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படை குழுவினர் 15 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் மாவட்ட கலெக்டர் சுரேந்திர குமார் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வந்தார்.

சுமார் 8 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். சம்பவ இடத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர், மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!