ஈரானில் திருமண விழாவில் எரிவாயு குவளை வெடித்ததில் 11 பேர் பரிதாப சாவு!

ஈரான் நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகேஸ் நகரில் நேற்று திருமண விழா ஒன்று நடந்தது. இதற்காக மணமக்களின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அங்கு வந்திருந்த உறவினர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பலத்த தீக்காயம் அடைந்திருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனந்தமாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் மணமக்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!