என்னை யாராலும் அழிக்க முடியாது – நித்யானந்தா!

சர்ச்சைக்கு பெயர் போன நித்யானந்தா சாமியார் தினம் ஒரு ‘கெட்டப்பில்’ பக்தர்களுடன் பேசி வருகிறார். அவரது பேச்சு வீடியோவாக ‘பேஸ்புக்’ மற்றும் இணைய தளங்களிலும் வைரலாகி வருகிறது. சாதாரண ஆளாக கோவிலில் புளிசாதம் சாப்பிட்டு கொண்டிருந்த என்னை, துரத்தி துரத்தி அடித்து விரட்டினீர்கள். இப்போது நான் பெரிய ஆளாகி விட்டேன். எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான் என்று எகத்தாளத்துடன் நித்யானந்தா பேசி உள்ளார். நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:- திருவண்ணாமலையில் நான் இருந்த போது என்னை அடிக்காமல் விட்டிருந்தால் அங்குள்ள 100 ஆசிரமத்தோடு இன்னொரு ஆசிரமம் என்ற பெயருடன் அங்கேயே இருந்துட்டு போயிருப்பேன். நான் எந்த சாமியாருக்கும் போட்டியாக வரவில்லை. இன்னொரு 4 பேர் சேர்ந்து பெங்களூரிலும் இருக்க விடாமல் அடி அடி என்று அடித்தனர். நான் 100 அடிக்கு 200 அடி கட்டிடத்துக்குள் எங்கேயோ முடங்கிக் கொண்டு வருபவர்கள் 4 பேருக்கு ஆசி சொல்லி வாழ்ந்து போயிருப்பேன். எங்கேயுமே இருக்க விடாமல் ரவுண்டு கட்டி அடித்தால் நான் என்னதான் செய்வது.

மீனாட்சி மீனாட்சி என்றேன். அதற்கு என்னாச்சி என்னாச்சி தம்பி என்றார். கோவிலுக்குள் விடமாட்டேன் என்கிறார்கள் தாயே என்றேன். அதற்கு கவலைப்படாதே ஒரு கோவில் கட்டி கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். பின்னர் மீனாட்சி மீனாட்சி என்றேன். அம்மா என்னாச்சி என்னாச்சி என்று கேட்டார். ஆதீனத்துக்குள் வரக்கூடாது என்கிறார்கள் என்றேன். அதுக்கென்ன கவலைப்படாதே தம்பி உனக்கு ஒரு ஆதீனம் கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார். பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மாட்டேன் என்கிறார்கள். தாயே என்றேன். அதுக்கென்ன விடுடா தம்பி பார்த்துக்கலாம் என்று சொன்னார். அவ்வளவுதான். ஆசீர்வாதம் செய்தார். கைலாசம் அமைந்தது. இதற்கு மேல் நான் என்ன சொல்வது.

4 பேருக்கு ஆசீர்வாதம் பண்ணிட்டு கோவிலில் போய் உண்ட சோறு ஒரு கவளம் வாங்கி தின்றுவிட்டு அண்ணாமலையாரை பார்த்து நினைத்து வாழ்ந்து இறந்து போயிருப்பேன். என்னை ஏன் இவ்வளவு பெரிய ஆள் ஆக்கினீங்க. இது என் கிரகமா உங்க கிரகமா யாருக்கு தெரியும். திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ஓடும் போது இவன் ஓடுகாலி பய. விட்டு விடுங்கடா என்று விட்டு இருந்தால் நான் அங்கே போய் வாழ்க்கையில் நிம்மதியாக இருந்திருப்பேன். 2003-ல் ஆரம்பித்து என்னை அழித்துவிடலாம் என்று என்னென்னவோ முயற்சி செய்கிறீர்கள். நான் வளர்ந்து கொண்டேதான் போகிறேன்.

கோவிலில் 2 உண்ட தயிர் சோறு வாங்கி தின்றுவிட்டு சிவனே என்று ஒரு மூலையில் படுத்திருந்து மிஞ்சி போனால் நாலைந்து சிஷ்யர்கள் இருந்திருப்பார்கள். ஒரு கார் இருந்திருக்கும். நான் வாய்க்கு வந்தது எதையோ ராமா, கிருஷ்ணா, கோவிந்தான்னு 4 பேருக்கு நல்லதை சொல்லிவிட்டு அப்படியே இருந்திருப்பேனே. என்னை அடித்தால் நான் என்னதான் பண்ணுவேன். எங்கேயோ ஒரு இடத்தில் வாழ்ந்து தானே ஆக வேண்டும். செத்தா போக முடியும். இந்து மதத்தில் சாவதற்கும், தற்கொலைக்கும் அனுமதி கிடையாது. நான் எங்கே போவது என்று பார்த்தேன். பெங்களூரில் ஒருவருக்கு 101 ரூபாய் கட்டணத்தில் வாரம் ஒருமுறை ஆசி சொல்ல சென்றேன். நான் அப்படியே இருந்திருப்பேன். ஒரு பக்தர் தட்டு முழுக்க பழம் எடுத்து வந்து சாமி எங்களுக்கு திருமணம் ஆகி ரொம்பநாளா குழந்தை இல்லை என்றார்.

சமாதியில் இருந்த நான் தட்டில் அண்ணாச்சி பழம் இருந்ததை கவனிக்காமல் அப்படியே எடுத்து கொடுத்து எல்லா பழங்களையும் சாப்பிடுங்கள் என்றேன். அண்ணாச்சி பழம் சாப்பிட்டால் கர்ப்பம் கலையும். ஆனால் அவர்களுக்கு கர்ப்பம் தரித்தது. குழந்தையும் பிறந்தது. மறுநாள் முதல் தினமும் 300 பேர் வரை அண்ணாச்சி பழத்துடன் வந்து விட்டனர். தினமும் 300 அண்ணாச்சி பழங்களை தொட்டு கையெல்லாம் புண்ணாகி விட்டது. அதன் பிறகு பெங்களூரில் தினமும் இருந்து பக்தர்களை ஆசீர்வதிக்க மாதம் 1001 ரூபாய் சம்பளம் கொடுத்தனர். அதற்காக நான் பெங்களூரிலேயே இருந்து விட்டேன். ஆனால் அங்கும் என்னை இருக்க விடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!