திருடர்களின் கிராமம்… திரைப்பட பாணியில் சிக்கி தப்பிய பொலிஸ்!

சென்னையில் மூதாட்டிகளை குறி வைத்து திருடி வந்த ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ராணிகளில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டை மட்டுமே தொழிலாக கொண்டஆட்டோ ராணிகளின் ஊரில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார் ஒருவழியாக ஒருவரை மட்டும் சென்னைக்கு பிடித்து வந்த பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு… சென்னையில் கடந்த ஒரு வருடமாக மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை நூதன முறையில் திருடும் மூன்று ஆட்டோ ராணிகள் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தனர். தனியாக நிற்கும் மூதாட்டிகளை ஆட்டோவில் அழைத்துச் சென்று உதவுவது போல் நடித்து அவர்களின் தங்க நகைகளை திருடி வந்தனர். இதே பாணியில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ள இந்த ஆட்டோ ராணிகள் கடந்த 3-ம் தேதி பெரம்பூர் பகுதியில் ஒரு மூதாட்டியிடம் கைவரிசை காட்டியதை தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆட்டோ ராணிகள் அவர்களுக்குள் தெலுங்கில் பேசி கொண்டார்கள் என்று மூதாட்டி ஒரு கொடுத்த தகவலை வைத்தும், சிசிடிவியில் சிக்கிய ஆட்டோ ராணிகளின் அடையாளத்தை வைத்தும் குற்ற ஆவண காப்பகத்தின் உதவியுடன் தேடிய போது அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டோ ராணிகளை பிடிக்க புளியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, செம்பியம் ஆய்வாளர் பரணிக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் என்ற ஊருக்கு விரைந்தனர். போலீஸ் என தெரியாமல் இருக்க மாறுவேடத்தில் கிராமத்திற்குள் நுழைய முயன்ற தனிப்படை போலீசாரை, சுமார் 200 குடும்பங்களை கொண்ட அந்த கிராமத்தினர் சுற்றி வளைத்தனர். வந்திருப்பது போலீசார் என தெரிந்தும் கூட அவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் தீரன் பட பாணியில் சுற்றி நின்று மிரட்டியுள்ளனர். அங்கிருந்து மீண்டு வந்து ஆந்திர போலீசாரிடம் நிலமையை சொல்லும் போது தான், அவர்கள் அனைவரும் திருட்டு கும்பல் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த கும்பலுக்கு தலைவர்களாக வேலு மற்றும் சிவா ஆகியோர் இருந்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பெண்களை திருட்டு தொழிலுக்கு அனுப்பி அவற்றில் பங்கு வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அந்த திருடர்களின் கிராமத்தில் வழக்கம். ஆந்திர போலீசாரே அந்த கிராமத்திற்குள் செல்வதற்கு அஞ்சுவார்கள் என கூறிய பிறகும், ஆந்திர காவல் துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அங்குள்ள போலீசார் சிலர் உதவியுடன் மீண்டும் அந்த சித்தூர் குப்பம் கிராமத்திற்குள் நுழைந்துள்ளனர் சென்னை தனிப்படை போலீசார்.

எதற்கும் அசையாத திருடர் கிராமத்தின் தலைவன், வழக்கில் சேர வேண்டிய நகைகள் எவ்வளவு வேண்டுமோ வாங்கிச் செல்லுங்கள், ஊருக்குள் புகுந்து யாரையும் கைது செய்ய முடியாது என மிரட்டியுள்ளான். குற்றவாளிகளை ஒப்படைக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று அதிக எண்ணிக்கையிலான போலீசாருடன் வந்து குற்றவாளிகளை தூக்க வேண்டியிருக்கும் என சென்னை போலீசார் கறார் காட்டியதும், வேறு வழியில்லாமல் ஆட்டோ ராணிகளில் ஒருவரான அகிலா என்ற கொள்ளைக்காரியை மட்டும் ஒப்படைக்க, கிராமத்திற்குள் இருக்கும் கனகா மற்றும் அலமேலு ஆகிய இருவரையும் கைது செய்ய முடியாமல் போலீசார் சென்னை திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள குற்ற வழக்குகளில் வெளி மாநில குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது, இது போன்ற சோதனைகளை நீண்ட காலமாக சந்தித்து வருவதாகக் கூறும் அதிகாரிகள், தமிழக காவல் துறை போன்று குற்றவாளிகளை பிடிக்க மற்ற மாநில போலீசார் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!