திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த கணவர்!

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மணப்பெண் தேடி வந்தனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவருக்கு மணப்பெண் கிடைக்கவில்லை. இதையடுத்து புரோக்கர் மூலம் வால்பாறை பகுதியை சேர்ந்த 27 வயதான ஒரு இளம்பெண்ணை பார்த்தனர். அப்போது பெண் வீட்டார் வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். மேலும் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். மேலும் திருமணத்துக்காக வாலிபர் வீட்டில் இருந்து பெண்ணின் குடும்பத்துக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது. பெண் பார்க்க சென்ற வாலிபர் திருமணமாகி மனைவியுடன் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் தனது வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் அவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு செல்ல ஊட்டி, கொடைக்கானலை தேர்வு செய்தனர். திருமணமான தகவல் கிடைத்ததும் புதுமண தம்பதியினரை உறவினர்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். இந்நிலையில் திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் வாந்தி எடுத்தார். இதைப்பார்த்த புதுமாப்பிள்ளை புட் பாய்சன் என்று நினைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மனைவியை அழைத்து சென்றார். அங்கு புதுப்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக அவரது கணவரிடம் தெரிவித்தனர். திருமணமான 4 நாளில் 2 மாத கர்ப்பமா? என்று அதிர்ச்சி அடைந்த கணவர் இதுபற்றி மனைவியிடம் கேட்டார். ஆனால் அவர் பதில் கூறவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் மீண்டும் மனைவியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வாலிபரின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றீர்களே, அங்கு என்ன சொன்னார்கள் என்று கேட்டனர். அதற்கு வாலிபர் எந்த பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து குடும்பத்தினர் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் தனது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று போட்டு உடைத்தார். இதனை கேட்டு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண் கிடைக்காததால் அவசர கதியில் விசாரிக்காமல் திருமணம் செய்து கொண்டோமே என்று விரக்தி அடைந்த வாலிபர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் எனக்கும், எனது மனைவிக்கும் திருமணமாகி 4 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்தபோது 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அந்த கர்ப்பத்துக்கு நான் காரணம் அல்ல. ஆனால் கருவை கலைக்க கணவர் என்ற முறையில் என்னிடம் கையெழுத்து கேட்டு பெண்ணின் பெற்றோர், அவர்களது சகோதரர்கள் என்னை மிரட்டுகிறார்கள். மேலும் கையெழுத்து போடவில்லை என்றால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கிறார்கள்.

மேலும் திருமணத்தின் போது பெண்ணின் குடும்பத்துக்கு நாங்கள் தான் நகை-பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டோம். பெண்ணின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், அதை மறைத்து எனக்கு 2-வதாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வருமாறு பெண்ணின் குடும்பத்தாரை அழைத்தனர். ஆனால் புதுப்பெண் உள்பட அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். மேலும் வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த புரோக்கரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!