மகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான துறைகள், நிறுவனங்கள். குறித்த அரசிதழ் அறிவிப்பு நேற்று நள்ளிரவு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ், அதிகபட்சமாக 88 அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காவல்துறை உள்ளிட்ட 31 அரச நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

முன்னைய அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த சிறிலங்கா காவல்துறை தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சின் கீழ் 48 நிறுவனங்களும், புத்தசாசன, கலாசார, மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் 23 நிறுவனங்களும், நகர அபிவிருத்தி, நீர் விநியோகம், மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் 17 நிறுவனங்களுமாக, மொத்தம் 88 நிறுவனங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வசமுள்ள அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுவரை அமைச்சராக யாரும் நியமிக்கப்படாத நிலையில், சமல் ராஜபக்ச இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ், 31 அரச நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

காவல்துறை, முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், அரச புலனாய்வுச் சேவை, ஆட்பதிவுத் திணைக்களம், வளிமண்டலவியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!