‘என்னை காத்துக்கொள்ளவே பாதுகாப்பான இடமாக கைலாசாவை அமைத்துள்ளேன்’ – நித்யானந்தா!

கடத்தல் வழக்கு, பாலியல் வழக்குகளில் சாமியார் நித்யானந்தாவை குஜராத், கர்நாடகா போலீசார் தேடி வருகிறார்கள். தலைமறைவான நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார். அவர் ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை நித்யானந்தாவும் வீடியோ வெளியிட்டு உறுதி செய்தார். ‘கைலாசா’ நாட்டின் குடியுரிமை கேட்டு இதுவரை 40 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா ஐகோர்ட்டு பெங்களூர் போலீசாருக்கு விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை நித்யானந்தாவின் இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நித்யானந்தா தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:- என் மீது கோபப்படும் நபர்களிடமிருந்து காத்துக்கொள்ளவே பாதுகாப்பான இடமாக கைலாசாவை அமைத்துள்ளேன். ஆகாயத்தில் பதிவாகி உள்ள கடவுளின் பதிவுகளை வாசிக்கும் போது அவை தங்க நிறத்தில் தோன்றுகிறது. என் மீதும், என் செயல்கள் மீதும் சீடர்கள் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம். வழக்கமாக என்னை அவ்வப்போதுதான் வைச்சு செய்வார்கள். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து கடுமையாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். 2 வருடத்துக்கு முன்பு நாட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு எனது பெயரை பயன்படுத்துவார்கள்.

ஓரிரு நாட்கள் இழுப்பார்கள். ஏதாவது ஒரு வதந்தி, கதையை கிளப்பி விடுவார்கள். அடி அடி என்று அடிப்பார்கள். இரண்டு கேசை போடுவார்கள். அங்கும் இங்கும் அலைக்கழிப்பார்கள். அடிக்கும் போதே நடுவில் இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன் என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். நானும் அதை சரியென்று கேட்டு நம்மை நல்லவன் என்று சொல்லிட்டாங்களே என அவர்கள் என்ன செய்தாலும் தாங்கிக்கிட்டு அப்படியே இருப்பேன்.

நாலு பேரு நாலு விதமா நாலு வி‌ஷயத்தை பேசினால் அது நாடு. அந்த நாலு பேருமே நாலு விதமாக நித்யானந்தாவை பற்றி மட்டுமே பேசினால் அது தமிழ்நாடு. என்னய்யா இது. உங்களுக்கே இது நல்லாயிருக்கா? இது அடுக்குமா? இது தர்மம்தானா? என்னை காமடி பீஸ் மாதிரி காட்ட முயற்சி செய்வது நீங்கள். உங்களையும், என்னையும் இனிமையோடு இணைத்து உணர்கிறீர்கள். உங்கள் எல்லோருக்குள்ளேயும் காமெடி இருக்கிறதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். உங்கள் தன்மையோடு என் தன்மை ஒத்து போகும் போது நீங்களும், நானும் ஒன்று என்று உணர்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!