பிலிப்பைன்ஸை சீர்குலைத்த புயல் – 16 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குலைக்கும் வகையில், சக்திவாய்ந்த பான்போன் புயல் தாக்கியது. நாட்டின் மத்திய பகுதியில் உள்ள தொலைதூர கிராமங்கள் மற்றும் கடற்கரைகள் உள்ளிட்ட பிரபல சுற்றுலா மையங்களில் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. இதன் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் இணையதளம் மற்றும் செல்போன் நெட்வொர்க்கும் துண்டிக்கப்பட்டது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

விசாயாஸ் தீவுகளைச் சேர்ந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில், புயலுக்கு 16 பேர் உயிரிழந்திருப்பதாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். புயல் தாக்குவதற்கு முன்பாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!