ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சர்க்ஹாரோவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் கொழும்பு வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
“இதன் போது, ரஷ்ய – சிறிலங்கா உறவுகளின் தற்போதைய நிலை, அரசியல் பேச்சுக்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள், வர்த்தகம், பொருளாதார, மனிதாபிமான மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பின் வளர்ச்சி, அத்துடன் இருதரப்பு சட்ட கட்டமைப்பை விரிவாக்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்துலக அமைப்புகளுக்குள், அதாவது ஐ.நா மற்றும் அதன் சிறப்பு அமைப்புகளுக்குள் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சர்க்ஹாரோவா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!