அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனை மாற்றுவதற்கு இரு தரப்பினரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருக்கிறார்.
வியாழக்கிழமை பிற்பகல் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு சொந்தமான வேரஹெர அலுவலகத்துக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது நிறுவன அதிகாரிகளிடம் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
அரச நிறுவனங்களுக்கு சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகைதருகின்ற பொது மக்கள் எவரையும் அசௌகரியத்துக்கும் உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும்.
அரச நிறுவனங்களில் சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைக்கேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது. நேரம் அனைவருக்கும் மிகவும் பெறுமதியானதாகும். எனவே சேவை பெறுநர்களுக்கு உடனடியாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தொழில்வல்லுனர்களைப் போன்று சாதாரண மக்களுக்கான சேவையினையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சேவையொன்றை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருகின்ற ஒருவருக்கு அதனை பொறுப்பேற்ற நேரத்தை குறிப்பிட்டு, மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்ள வர வேண்டிய நேரத்தையும் அறிவிப்பது முக்கியமானதாகும். அதன் மூலம் நிறுவனத்தில் வீணாக நேரத்தைக் கழிக்காது தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்களுக்கு முடியுமாக இருக்கும்.
நாட்டின் அதிகளவான மக்களுக்கு சேவையினை வழங்கும் நிறுவனமான மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனம் எப்போதும் முன்னுதாரணமாக செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதன்போது ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்காதிருப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் உறுதியாக செயற்பட வேண்டும். ஊழியர் வெற்றிடங்கள் இருக்குமானால் 54,000 பட்டதாரிகளிலிருந்து பொருத்தமானவர்களை அதற்காக தெரிவுசெய்ய முடியும்.
நடைமுறையிலுள்ள முறைமைகள் ஒரு மாத காலப்பகுதியில் மாற்றப்பட வேண்டும். அதனைக் கண்காணிப்பதற்காக மீண்டும் வருகை தருவேன். அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனை மாற்றுவதற்கு இரு தரப்பினரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என்றார்.
புகைப்படம் எடுப்பது முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வரையிலான அனைத்து பிரிவுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலக பணிக் குழாமினரையும் சந்தித்து நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலைக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன் போது அதிகாரிகள் மத்தியில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
இவ்வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக நிவர்த்திசெய்து அதனை முழுமையாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வைத்தியசாலையில் 68 விசேட வைத்தியர்களுக்கான தேவை இருந்தபோதும் அது 40 பேரின் மூலமே நிறைவேற்றப்படுகின்றது. சுமார் 100 சாதாரண வைத்தியர்களுக்கான தேவை உள்ள போதும் அதனை சுமார் 20 வைத்தியர்களே நிறைவேற்றி வருகின்றனர்.
700 கட்டில்கள் மற்றும் 9 வாட்டுக்களைக் கொண்ட இவ்வைத்தியசாலையில் தற்போது 4 வாட்டுக்கள் மாத்திரமே செயற்படுத்தப்படுகின்றன. அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யும்போது அதற்கான அறிவித்தல்களை பிரசுரித்து உரிய முறைமைகளுக்கேற்ப அதனை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்
காலி முகத்திடலுக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் வளாகத்துக்கும் ஜனாதிபதி கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். சுற்றியுள்ள பகுதிகளை அழகாகவும் முறையாகவும் பேணிவருவது தொடர்பாக இராணுவத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
முறையான திட்டமொன்றினூடாக சூழலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!