ரெயிலில் சாகசம்: தடுப்புக் கம்பியில் மோதி இளைஞர் பலி!

மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ளூர் ரெயில்களில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வது, சாகசங்களில் ஈடுபடுவது போன்றதுமான வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்காக செய்யும் இது போன்ற செயல்களால் சில சமயங்களில் விபரீதங்கள் நேர்ந்து விடுகின்றன. தற்போது மும்பையில் அவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி மும்பையில் உள்ளூர் ரெயில் ஒன்றில் பயணம் செய்த 20 வயதான தில்ஷன் என்ற இளைஞர் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்து வந்தார். இதனை அவர் நண்பர் செல்போனில் படம் எடுத்த நிலையில் திடீரென ஆற்றுப்பாலத்தில் மோதிய தில்ஷன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே ஓடும் ரெயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் என்றும் அது சட்டவிரோதமானது என இந்திய ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரெயில்வே, பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ரெயிலில் இருந்து இறங்குவது, ஓடும் ரெயிலில் ஏறுவது சட்டவிரோதமானது என்று எச்சரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!