12ஆம் திகதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும் : ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடனான சந்திப்பு திட்டமிட்டபடி எதிர் வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நிரந்தர பகை நாடுகளாக உள்ள அமெரிக்காவும், வட கொரியாவும் அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம். அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

இதன் படி எதிர் வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடு ஏற்பட, இச் சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

இந்நிலையில் இச் சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்று, ட்ரம்பை சந்தித்து, கிம் ஜாங் உன் சார்பில் ஒரு பெரிய கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார்.

இதையடுத்து திட்டமிட்டபடி வருகிற 12ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப்,

“நாங்கள் ஜூன் 12ஆம் திகதி அந்நாட்டு தலைவரை சந்திக்க உள்ளோம். இது ஒரு வெற்றிகரமான செயற்பாடாக இருக்கும். நான் ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூர் பயணம் செய்கிறேன். இது ஒரு ஆரம்பமாக இருக்கும்.

ஒரு கூட்டத்தில் நல்லது நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்த ஒரு கூட்டத்தில் மிகவும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

இன்று நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இது ஒரு பெரிய தொடக்கமாகும் என நினைக்கிறேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!