ஜனாதிபதி கோத்தாபய சரியானதை செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது – சம்பந்தன்

அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதியால் முடியாமல் போயுள்ளதென்றால் அதற்கு தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமல் போனமையே காரணமாகும்.

அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியவில்லை.

எனவே இந்த புதிய அரசாங்கம் உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரு நாட்கள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பெளத்த சிங்களமக்கள் பெரும்பான்மை மக்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும் ஏனைய சமூகங்களும் வாழ்ந்கின்றனர். அவர்களை புறக்கணிக்க முடியாது. ஏனைய மக்களின் கலாசரம், சமூக கட்டமைப்பை மதிக்க வேண்டும். நீண்டகாலமாக இந்த கட்டமைப்பு உள்ளது. எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை, அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!