இலங்கையை இராணுவமயமாக்குவதற்கு நடவடிக்கை – சர்வதேசம் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம், இரு மனித உரிமைக் குழுவினர், விமர்சகர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்து அடக்குமுறையைத் தூண்டும் செயலை கட்டவிழ்த்து இலங்கையை இராணுவமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று சர்வதேசம் குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில் காணப்படுவதாவது,

தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை குறிவைத்து 69 மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை இந்த இரு மனித உரிமைகள் குழுக்களும் ஆவணப்படுத்தியுள்ளன என்றும் அதில் சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமாக இருந்தன என்றும் சிலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சர்வதேச சமூகம் இலங்கைக்கு அளித்துவரும் பாதுகாப்பு உதவியை அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது முன்னாள் இராணுவ படைப்பிரிவின் பல உறுப்பினர்களை பதவிகளுக்கு நியமிப்பதன் மூலம் அரசாங்கம் முழுவதும் தனது கூடாரங்களை எவ்வாறு பரப்பியுள்ளார் என்பதையும், பொலிஸ் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை அதிகளவில் இராணுவமயமாக்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோசடி உள்ளிட்ட கடந்த கால குற்றங்கள் தொடர்பாக விசாரித்த பலர் தற்போது அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, முன்னர் ஊழல் குற்றச்சாட்டு அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் இப்போது மீண்டும் பதவியில் உள்ளனர் என்றும் இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!