ஆஸ்திரேலிய காட்டுத்தீ: தன்னார்வ வீரர் உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் பரவி வருகிற காட்டுத்தீ அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு பெருத்த தலைவலியாக மாறியுள்ளது. இந்த தீயில் சிக்கி இதுவரை தீயணைப்பு வீரர்கள் 3 பேர் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகி உள்ளன. அமெரிக்காவின் இண்டியானா மாகாண பரப்பளவுக்கு சமமான பகுதி தீயில் பாதித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டங்கள் நடத்தினர். அவற்றில் பிரதமர் ஸ்காட் மோரீசன் பதவி விலக வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ வீரர் ஒருவர், நேற்று முன்தினம் மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர், ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த பில் ஸ்லேட் (வயது 60) ஆவார். இவர் வனத்துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இவருடன் சேர்த்து இதுவரை ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தீயணைப்பு பணியில் பில் ஸ்லேட்டுடன் சேர்த்து 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!