முகநூல் காதல்: இந்திய வாலிபரை கரம்பிடித்த கனேடிய பெண்!

கனடா நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 24). சிறுகதை எழுத்தாளர். இவர், கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வைபவ் (24) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தங்களுக்குள் புகைப்படங்களை பரிமாறி காதலை வளர்த்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக அவர்கள், பெற்றோர்களின் சம்மதத்தை நாடினர். இருதரப்பு பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.

இதனையடுத்து இவர்களின் திருமணம் நேற்று காலை கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணாநகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி நடந்தது. மாப்பிள்ளை வைபவ் வேட்டி சட்டையும், ஜோஸ்பின் பட்டு சேலையும் அணிந்திருந்தனர். இதையடுத்து மேளதாளம் முழங்க மாலை மாற்றி திருமணம் நடந்தது. விழாவில் கிராம மக்கள், இருவீட்டார் திரளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சைவ விருந்து பரிமாறப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!