பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் அறிக்கை 3 மாத காலப்பகுதிக்குள் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சுக், முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரிய, பேராசிரியர் மாகம்மன பஞ்ஞானந்த தேரர், கலாநிதி பெனட் சாந்த அடிகளார், கலாநிதி சந்திரா அம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ் ஆகியோர் அங்கத்தவர்களாகச் செயற்பட உள்ளனர். இதன் அமைப்பாளரும் செயலாளருமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளார்.

இதேவேளை கடந்த 5 வருட காலப்பகுதியில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக கல்விக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரம் பேர் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டுள்ளனர். இவர்கள் உள ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளானமை இதற்கான காரணமாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!