ஓடும் பஸ்ஸில் இருந்து துண்டாகி விழுந்த பல்கலைக்கழக மாணவனின் கை!

பஸ் ஒன்றில் பயணித்த பல்கலைக்கழக மாணவனின் கை, விபத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார். நேற்று நண்பகல், கொழும்பிலிருந்து பிபிலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது, வலது பக்கமாக, பின்வரிசையிலுள்ள ஆசனத்தில் பயணித்த குறித்த பல்கலைக்கழக மாணவன், தனது வலது கையை வெளியே நீட்டியவாறு பயணித்துள்ளார். இரத்தினபுரி, பெல்மதுளை, சன்னஸ்கம பிரதேசத்தில் டிப்பர் வாகனம், பஸ்ஸின் வலது பக்கமாக இருந்த குறித்த மாணவனின் கையில் மோதிதோடு, மாணவனின் கை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது. இதனையடுத்து, துண்டாடப்பட்ட கையுடன் குறித்த மாணவன் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கொழும்பில் ஏறிய குறித்த மாணவன், பிலிகுல்ஓயாவில் இறங்குவதாக தெரிவித்ததாக பஸ் சாரதி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர், அகலவத்தை கித்துல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த, 23 வயது மத்துமாகே தொன் இசுறு சந்தருவன் எனும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!