என் மீது முழுமையான விசாரணை நடத்துங்கள் – அரசிடம் கோரினார் ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரானின் சகோதரர் ரில்வானை கொழும்பு வைத்தியசாலையில் நான் பார்க்க சென்றதாக வந்த செய்திகள் தவறானவை. இதனால் எனக்கு இப்போது அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ரவூப் ஹக்கீம் எம்பி இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும்,

அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியால் இப்படியான செய்திகள் வெளியிடப்படுகின்றன. அரசியல் ரீதியான காரணங்களுக்காக இப்படியான கதைகளை சோடித்து மக்களை ஏமாற்றும் முயற்சி இது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்புபடுத்தி இப்படியான செய்திகள் வெளிவந்தன. நான் எதனையும் இரகசியமாக செய்தவனல்ல. காத்தான்குடிக்கு நான் சென்ற போதும் இப்படியான செய்திகள் வெளிவந்தன.

பயங்கரவாதி என்று தெரியாமல் நான் சந்தித்தவர்களை வைத்து இப்படியான செய்திகள் வருகின்றன. செய்யாத குற்றத்திற்கு நான் குற்றவாளியாக தயாரில்லை. உயிர்த்து ஞாயிறு தின தாக்குதலை நடத்தியவர்கள் எமது மதத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றவர்கள் அல்லர். அதனை எமது மதமோ சமூகமோ அங்கீகரிக்கவும் மாட்டாது.

அபத்தமான குற்றச்சாட்டுக்களை ஏற்க நான் தயாரில்லை. சந்தேகம் இருந்தால் என் மீது முழுமையான விசாரணை நடத்துங்கள். அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க நான் தயார். – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!