ரிஷாத்துக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் இன்றுகாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவரது கருத்து முட்டாள்தனமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்தே பிரதேச சபைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரே காரணம். குறித்த குப்பை மேடு இருப்பது தெரிந்தும் அதற்கு அருகே காணிகளை வழங்கி அந்த மக்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியவர் அவரே. குப்பை மேடு வந்த பிறகு தான் குடியேற்றங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

குப்பை மேட்டுக்கு அருகில் குடியேற்றத்தை செய்த அந்த முட்டாள்தனமான வார்த்தை அவருக்கேதான் பொருந்தும். எனவே, அவரது கருத்தினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

“முதல் வந்தது குப்பை மேடா குடியேற்றமா?, குப்பைகளை எங்கே போடுவது?, குப்பை மேட்டிற்கு அருகில் குடியேற்றம் செய்தது யார்?” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!