சொத்தை எழுதிக் கேட்டு தந்தையை கொடூரமாகத் தாக்கும் மகன்கள்!

சிதம்பரம் அருகே வீட்டை எழுதிக் கேட்டு வயதான தந்தையை மகன்கள் இருவர் கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், நீதி கேட்டு அந்த முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பரிதாபம் அரங்கேறியிருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீழ் அனுப்பம்பட்டைச் சேர்ந்த 75 வயதான கோவிந்தராஜுவுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் 3 மகன்கள் தந்தையை கண்டுகொள்ளாத நிலையில், கடைசி மகனான நித்தியானந்தம் வெளிநாட்டில் வேலை செய்தவாறு தந்தைக்கு பணம் அனுப்பி கவனித்து வந்திருக்கிறார். மகன் அனுப்பிய பணத்தில் வீடு ஒன்றை கட்டி, அதனை நித்தியானந்தம் பெயருக்கு எழுதி வைத்ததாகக் கூறுகிறார் கோவிந்தராஜ். அந்த வீட்டை முதல் மகனான சுகுமாரும், 3வது மகனான ரெங்கநாதனும் அபகரித்துக்கொண்டு தன்னையும் நித்தியானந்தத்தின் மனைவி, பிள்ளைகளையும் அடித்து விரட்டிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய கோவிந்தராஜ், தனியாக வந்து கிள்ளை ரயில்நிலைய பிளாட்பாரத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். குடிபோதையில் அங்கு வந்த மகன்கள் இருவரும் வீட்டை முறைப்படி தங்கள் பெயருக்கு எழுதி வைக்குமாறு கூறி அவரை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகளை ரயில்நிலையத்திலிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். 75 வயது முதியவர் என்றும் பாராமல் அவரது முகத்தில் ஒரு மகன் எட்டி உதைப்பதும் மற்றொருவன் கல்லால் அவரை தாக்குவதும் அதில் பதிவாகியுள்ளது.

மகன்களின் இந்தத் தாக்குதல் குறித்து கிள்ளை காவல்நிலையத்தில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்துள்ளார். தனது வீட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார் கோவிந்தராஜ். அவரை மீட்ட போலீசார், மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனுவை அளித்தனர். சொத்துக்காக பெற்ற தந்தை என்றும் பாராமல், அவரை கொடூரமாகத் தாக்கிய இரக்கமற்ற அரக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!