பாகிஸ்தானில் கொடூரம்: மணப்பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்து வேறொருவருடன் திருமணம்!

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் மதியரி மாவட்டம் ஹலா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவரது மகள் பாரதி பாய்(24). அவருக்கு பெற்றோர் ஏற்பாட்டின் மூலம் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாரதி பாய் திருமண மேடைக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது போலீசார் மற்றும் அடியாட்களுடன் வந்த ஷா ருஹு குல் என்ற நபர் மணக்கோலத்தில் இருந்த பாரதி பாயை திருமண நிகழ்ச்சியில் இருந்து கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில், தனது மகளை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மதமாற்றம் செய்து ஷா ருஹு குல் திருமணம் செய்துகொண்டதாக பாரதி பாயின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், மகளை தங்களிடம் திருப்பி ஒப்படைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையில், பாரதி பாய் முஸ்லிம் மதத்திற்கு மாறியதற்கான ஆவணங்களும், ஷா ருஹு குல்லை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

சமூக வலைதளத்தில் வெளியான ஆவணத்தில் பாரதி பாய் கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதியே முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மதமாற்ற ஆவணத்தின் படி, பாரதி பாயின் தற்போதைய பெயர் புஷ்ரா. பாரதி பாயை ஷா ருஹு குல் கடந்த டிசம்பர் மாதமே முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றம் செய்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த தகவல் தெரியவந்ததையடுத்து பாரதியின் பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக வெறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த திருமணம் குறித்து அறிந்த ஷா ருஹு குல் போலீசார் உதவியுடன் மணமகள் பாரதியை திருமணம் நடைபெறும் இடத்திற்கே வந்து கடத்திச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சமீப காலமாக சிறுபான்மையினராக வாழும் இந்து, கிருஸ்தவ மற்றும் சீக்கிய பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!