பள்ளி மாணவியை உயிருடன் எரித்த மர்ம நபர்கள்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவரது மகள் பாரதி (வயது 16). அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் வீட்டின் பின்புறத்தில் தனியாக அமர்ந்து படித்து கொண்டிருந்தார். அப்போது மர்ம மனிதர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் பாரதியை கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த மாணவி பாரதி மீது மண் எண்ணையை ஊற்றி உயிருடன் தீ வைத்து கொல்ல முயன்றனர். இதில் வலி தாங்க முடியாமல் பாரதி அலறி துடித்தார். அந்த சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை கண்ட மர்ம மனிதர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் பாரதியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புதுவை 3-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு பிரீத்தி முன்னிலையில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெய்சங்கர் மற்றும் போலீசார் பாரதியிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற மர்ம மனிதர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் எதற்காக மாணவி பாரதியை கொலை செய்ய முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம மனிதர்கள் 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!