ரஷியாவில் நடுக்கடலில் சிக்கிக்கொண்ட 600 மீனவர்கள்!

ரஷியாவின் காம்சட்கா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓகோட்ஸ்க் கடல் உறைந்து பனிக்கட்டியாகி உள்ளது. இந்த பனிக்கட்டிகள் எளிதில் உடைந்து விடும் எனவும், எனவே மக்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மீனவர்கள் அரசின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, மீன்பிடிப்பதற்காக ஓகோட்ஸ்க் கடலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் சுமார் 600 மீனவர்கள் உறைந்து போன கடலின் நடுப்பகுதிக்கு நடந்து சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது உறைந்த மேற்பரப்பு உடைந்ததால் மீனவர்கள் அனைவரும் நடுக்கடலில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் ராட்சத பனிக்கட்டி ஒன்றில் நின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் படகுகளில் சென்ற மீட்பு குழுவினர் சுமார் 7 மணி நேரம் போராடி 536 மீனவர்களை மீட்டு கரை சேர்த்தனர். முன்னதாக 60 பேர் எவ்வித உதவியுமின்றி அவர்களாகவே அருகில் இருக்கும் கடற்கரைக்கு வந்துவிட்டதாக மீட்பு குழு தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!