சீனாவில் கொரோனா தாக்குதலுக்கு 6 மருத்துவ ஊழியர்கள் பலி!

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவில் ருத்ர தாண்டவமாடி வருகிறது. இந்த நோய் பற்றிய அதிர்ச்சி தகவல்களை அங்கு முதலில் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் லி வென்லியாங்கும் அதே வைரஸ் நோய்க்கு பலியானது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையில் பக்க பலமாக இருந்து வந்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள், அது மட்டுமல்ல மேலும் 1,716 சுகாதார ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. 1,716 பேரில், 1,102 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள், 400 பேர் ஹூபெய் மாகாணத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்த தகவலை தேசிய சுகாதார ஆணையத்தின் துணை மந்திரி ஜெங் யிக்சின் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் போதுமான முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள் இல்லாமல் பணியாற்றுவதால், அவர்களுக்கு இந்த நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது. உகான் நகரில் உள்ள சமுதாய மருத்துவ மையம் ஒன்றில் பணியாற்றுகிற டாக்டர் ஒருவர் கூறும்போது, என்னோடு பணியாற்றுகிற 16 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகளாக நுரையீரல் தொற்றும், இருமலும் இருக்கிறது என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், சீனாவில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் நோய் தாக்கி மேலும் 121 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் அங்கு இந்த வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,488 ஆக உயர்ந்துள்ளது. ஹூபெய் மாகாணத்தில் மட்டுமே 116 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 4,823 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது, மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஒட்டுமொத்தமாக 5,090 பேருக்கு புதிதாக இந்த கொரோனா வைரஸ் நோய் பாதித்து இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!