சஜித் கூட்டணியில் குமார வெல்கம!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கட்சியின் அதிருப்தி அணியினருடன் இணைந்து (சுரகிமு ஸ்ரீலங்கா) நாட்டைப் பாதுகாப்போம் அமைப்பின் மூலம், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இரண்டு தினங்களாக நடைபெற்ற சந்திப்புக்களையடுத்து குமார வெல்கம ஆதரவு தரப்பினர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி சஜித் அணியுடன் இணையும் தீர்மானத்தை எடுத்துள்ளனர். பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்திலும் தெற்கில் ஒரு மாவட்டத்திலும் சில வேட்புமனுக்களை வழங்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நாளை மறுதினம் நடக்கவிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் புரிந்துணர்வு உடன்படிக்கையின் போது சுரகிமு ஸ்ரீலங்கா சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கைச்சாத்திடவிருக்கின்றார். குமார வெல்கமவுடன் முக்கியமான சிலர் சு.க.விலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அக்கட்சியின் மேலும் சில அதிருப்தியாளர்கள் சஜித் தரப்புடன் இணைவதற்கு பேச்சுகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!