மஹிந்த தப்பியோடாமல் விவாதத்திற்கு வரவும் : சவால் விடுத்த மங்கள

மஹிந்த ராஜபக்ஷ தப்பியோடாமல் விவாதத்திற்கு வருமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் இன்று சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிதி அமைச்சின் மது வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முனையக் கூடாது. பொய் கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதனை நிறுத்த வேண்டும். வரி விவகாரம் உட்பட பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவுடன் விவாதத்திற்கு தயாராக உள்ளேன்.

ஆகவே மஹிந்த ராஜபக்ஷ தப்பியோடாமல் விவாதத்திற்கு வரவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அதிகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர். என்றாலும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் காணப்பட்ட விலையை விட தற்போது குறைவாகவே உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ 20 வீதம் வரி குறைப்பதாக ஊடகங்களுக்கு அறிவித்தாலும் அதனை எப்படி செய்வது என்பதனை அவர் விபரிக்கவில்லை. 20 சதவீதம் வரியை குறைத்தால் மறைமுக வரியை அதிகரிக்க வேண்டிவரும். தற்போது நேரடி வரிக்கான பைல் 4 இலட்சமே உள்ளது. ஆகவே நேரடிக்கும் மறைமுக வரிக்கும் பிரித்து கையாள வேண்டும்.

தற்போது புதிய வருமான வரி சட்டத்தை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிதாக 42 ஆயிரம் வரி பைல் திறக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் புதிய பைல்கள் 42 ஆயிரம் திறக்கப்பட்டமை விசேட அம்சமாகும். அடுத்த ஆண்டில் நேரடி வரி வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் வட் வரி 2.5 வீதத்தினால் குறைக்க முடியும். மஹிந்த ராஜபக்ஷ 20 வீத நேரடி வரி விதிப்பை குறைப்பதாயின் சாதாரண மக்களுக்கான வரியை அதிகரிக்க வேண்டி வரும்.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முனையக்கூடாது. பொய் கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதனை நிறுத்த வேண்டும். பொருளாதார விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விவாதத்திற்கு தயாராக உள்ளேன். ஆகவே மஹிந்த ராஜபக்ஷ தப்பியோடாமல் விவாதத்திற்கு வர வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!