தூய்மையான கரங்களுடன் வந்து தூய்மையாகவே விடைபெறுகிறேன்

கடந்த நான்கரை வருடங்களில் நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்துக்காக தம்மால் விசேட சேவையாற்றக் கிடைத்தது என எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றம் முன்னுதாரணமான நாடாளுமன்றமாக உலகம் முழுவதிலும் கௌரவத்தைப் பெற்றிருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (06) நாடாமன்றத்தில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கரு ஜயசூரிய,

சவால் மிக்க காலப் பகுதியில் நாடாளுமன்றப் பணியாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் ஊடாக பரந்துபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, அவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தலையெடுத்த இனவாத தீயைத் தணிப்பதற்கு நாடாளுமன்ற குழுக்கள் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்தன.

சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணியாளர்கள் வழங்க முழுமையான ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். நான் இந்தப் பதவிக்கு தூய்மையான கரங்களுடன் வந்தது போன்றே விடைபெற்றுச் செல்லும் போதும் அவ்வாறே செல்கிறேன் என நான் நம்புகிறேன். அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் தூய்மையாக செயற்பட முடியுமாயின் எமது நாடு இதனை விடவும் அதிஷ்டம் மிக்கதாக மாறும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!