மைத்திரி அணியை கொரோனாவுடன் ஒப்பிடும் மொட்டு கட்சி முன்னாள் எம்.பி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை, பொதுஜன பெரமுனவுடன் சேர்த்துக் கொள்வது, கொரோனா வைரஸ் நோயாளியை வீட்டிற்குள் அனுமதிப்பது போல ஆபத்தானது என்று அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியான மிகவும் பலமான வகையில் பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றது. விசேடமாக பொதுஜன பெரமுனவின் அனைத்து அமைப்பாளர்களும் போட்டியிட எதிர்பார்த்துள்ளனர். அதற்கான கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அனுமதியளிப்பார் என்றும் நம்பிக்கை வெளியிடுகிறோம்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை எம்முடன் சேர்த்துக் கொள்வது பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களை இணைத்துக் கொள்வது குறித்து எமக்குப் பிரச்சினையில்லை.

ஒருவிதமான ஆபத்து இருக்கின்றதுதான். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமைத்ததன் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சுதந்திரக் கட்சியினர் எம்மிடமிருந்து பிரிந்து சென்றால் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடைய வேலைத்திட்டங்கள் சிந்தனைகள் நெருக்கடிக்கு இட்டுச்சென்றுவிடும் என்ற ஆபத்து நிலை காணப்படுகின்றது.

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளர் ஒருவரை வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டால் ஏற்படுகின்ற ஆபத்தான நிலைமையைப் போன்றே சுதந்திரக் கட்சியினரையும் எமது கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும்.

இந்த விவகாரத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் தேர்தலை வெற்றிகொள்ள வைப்பதற்கு ஆதரவாளர்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!