தமிழர் ஒற்றுமையை சிதைத்து விடும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை!

சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கி விடும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமைதான்.

முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழும்பிப் போய் உள்ளது. இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும். இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

கத்தோலிக்கர்களாகிய நாம் நாட்டின் நலனையும் எமது இனத்தின் நலனையும் முன்னிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாகவோ அல்லது சுயேட்சையாகவோ இந்த தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாடவட்டத்தின் கொள்கை அல்ல என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!