கொரோனாவால் உயிரிழந்த நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்த முதல் நபர் அந்த முதியவர் தான் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதியவருக்கு சிகிச்சையளித்த 63 வயது மருத்துவருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று மருத்துவர் தனிமையான வார்டுக்கு மாற்றப்படவுள்ளார். கர்நாடக மருத்துவரை கொரோனா தாக்கியதையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!