யாழ். மருத்துவகூடத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு!

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனலைதீவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு மருத்துவர்கள் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளனர். அவரது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படும்.

எனினும் அடுத்த வாரம் தொடக்கம் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான ஆய்வு கூடப் பரிசோதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள பிசிஆர் இயந்திரத்தை இயக்குவதற்கு போதிய ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே வரும் புதன்கிழமை இந்தப் பரிசோதனைகளை அங்கு செய்ய முடியும் என்று நம்புகின்றேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!