ஊரடங்கில் நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது சூடு! – மூவர் காயம்

கொழும்பில் இருந்து மொரட்டுவை, நோக்கி பயணித்த வாகனம் மீது எகொடஉயன பகுதியில் நேற்றிரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது அதில் பயணித்த 4 பேரில் 3 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், காயமடைந்தவர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொரட்டுவை நகரில் உள்ள வீதித்தடையில் வாகனத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரால் சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த குறித்த வாகனம் எகொடஉயன பகுதிக்கு அருகில் உள்ள வீதித்தடையிலும் நிறுத்தாமல் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் எகொட உயன புதிய பாலத்துக்கு அருகில் உள்ள வீதித்தடையில் மோட்டார் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த சிற்றூந்து பொலிஸார் இருந்த திசையை நோக்கி பயணித்துள்ளதுடன், அவர்களை மோதி செல்வதற்கு முயற்சித்ததாகவும் இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் பயணித்தவர்கள், பத்தரமுல்லை பெலவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!