யாழ். சிறையில் இருந்து 325 பேர் இதுவரை விடுதலை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 325 கைதிகள் நேற்று வரை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதியுடன் இணைந்து சிறைகளில் உள்ள கைதிகளை நீதிமன்றங்களின் ஊடாக பிணையில் விடுதலை செய்து வருகின்ரது. சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கட்டம் கட்டமாக கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து நேற்று வரை 325 கைதிகள் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலை செய்யப்படும் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் பொலிஸ் பிரிவுகளில் உறவினர்களை அழைத்து அவர்களின் உறவினர்களிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!