கொரோனா பலி: இத்தாலியை நெருங்கும் அமெரிக்கா!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு 10 லட்சத்து 9 ஆயிரத்து 452 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 853 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலியில் வேகமாக பரவியது. மேலும், கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது.

அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரு நாளில் 760 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தாக்குதலுக்கு 708 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் இத்தாலியிலும் (760 பேர்) அமெரிக்காவிலும் (708 பேர்) பலியானோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!