கட்டுக்கடங்காத கொரோனா: ஒரே நாளில் பிரான்ஸில் 355 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்து 9 ஆயிரத்து 452 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 853 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2 லட்சத்து 11 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடிவந்தது. ஆனால், இத்தாலியைக் காட்டிலும் மற்றொமொரு ஐரோப்பிய நாடான பிரான்சில் கொரோனா தற்போது தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளதால் பிரான்ஸ் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!