ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் இலங்கை தமிழர்கள்: தேடிச்சென்று உதவிய நல்லுள்ளம்!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் உதவிகரம் நீட்டியுள்ளார். சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் வீட்டுக்குள் முடங்கினர்.

மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் இலங்கை தமிழர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். அவர் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உணவுப் பொருட்கள் வழங்க உள்ளார். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிப்பதற்கான கருவியும் இலவசமாக வழங்கினார். அவரது செயலை இலங்கை தமிழர்கள் மனதார பாராட்டினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!