கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு பெண்மணி உயிரிழப்பு!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 15 லட்சத்து 9 ஆயிரத்து 283 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 88 ஆயிரத்து 327 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 5 ஆயிரத்து 274 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 149 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 411 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு பகுதியில் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 61 வயது நிரம்பிய பெண் காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பெண் உடனடியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், 61 வயது நிரம்பிய அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே (நேற்று) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது கொரோனாவுக்கு ஜம்மு பகுதியில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். இதனால், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அந்த யூனியன் பிரதேசத்தில் 158 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!