ஆலோசனையை புறக்கணித்து மக்களை ஆபத்தில் தள்ள வேண்டாம்…! – சுரேஷ் தெரிவிப்பு

நாட்டின் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை புறம்தள்ளி கோட்டாபய அரசு தேர்தலுக்காக மக்களை ஆபத்தில் தள்ளப் போகின்றதா எனக் கேள்வி எமுப்பியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தலுக்காக மக்களை ஆபத்துக்குள் தள்ளிவிட வேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார திணைக்களத்தின் அறிவுரைகளை கேட்காமல் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக செயற்பட்டு வருகின்றது.

இது மக்களுக்கு பாதகத் தன்மையை ஏற்படுத்துவதும், பாரிய விளைவுகளையும் உருவாக்கலாம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலானது தொடர்ச்சியாக நாட்டில் இருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

எனினும் அரசாங்கம் அவர்களின் கருத்துக்களை செவிமடுக்காது தேர்தலை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றது. நடைபெறவுள்ள தேர்தலானது ஜனநாயகமாக நடைபெறுமா? என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் கருத்து சுதந்திரத்தினை வெளிப்படுத்தப்பட முடியாத வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் மக்களுக்கு தமது கருத்துக்களை பகிர அரசியல் கட்சிகளுக்கு சந்தர்ப்பங்கள் வழங்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!