தமிழக அரசை கலைக்கும் எண்ணமில்லை -இல கணேசன்.

தமிழக அரசை கலைக்கும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை என்று பாரதீய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினர் இல கணேசன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘காவிரி பிரச்சனை தொடர்பாக அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பிரதமர் மோடி ஏன் கலந்து பேசவிலலை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அப்போது சட்டசபை தேர்தல் நடந்ததால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை.

அதே நேரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை 100-க்கு 100 சதவீதம் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. முத்தலாக் விவாகரத்து சட்டம் குறித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனை அ.தி.மு.க. உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பித்துரை பாராட்டி பேசினார்.

ஆனால் இப்தார் விருந்தில் முத்தலாக் சட்டம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து பேசி உள்ளார். இது அவரது கருத்தா? கட்சியின் கருத்தா? என தெரியவில்லை. எனவே தமிழக அரசு முத்தலாக் சட்டம் குறித்து தங்களின் கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழு பரிந்துரை தற்போது வெளிவந்துள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரலாம்.தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இப்போது ஆலோசிக்கவில்லை.

தமிழகத்தில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் சூரியன் உதிக்கும் இடத்தில் சந்திரன் இருக்காது. அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை. தற்போது மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன்தான் நாங்கள் உள்ளோம். தேர்தல் வரும் போது அந்த நேரத்தில் கலந்து பேசி கூட்டணி பற்றி பின்னர் அறிவிப்போம்.

தமிழக அரசை கலைக்கும் எண்ணம் மத்திய பா.ஜனதா அரசுக்கு கிடையாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் அப்படி நடந்துள்ளது. அதே நேரத்தில் ஆட்சி தானாக கலைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!