கொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..!

கேரளாவில் 4 மாத குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 23,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,814 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 723 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 மாதக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17ம் தேதி கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பெற்று வந்தது. இதனை அடுத்து அக்குழந்தைக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அங்கு குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 4 மாத பிஞ்சு குழந்தையை இறுதிச்சடங்கிற்கு கொண்டு சென்ற புகைப்படம் தற்போது வெளியாகி காண்போரின் நெஞ்சை கணக்கச் செய்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!